Full Text
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமையியல் மேல்முறையீட்டு அதிகாரவரம்பு
சிறப்பு அனுமதி மனு (உரிமையியல்) எண் 17303/2022
அ. வில்சன் பிரின்ஸ் ... மனுதாரர்
எதிர்
நாசர் & பலர் .. எதிர்மனுதாரர்கள்
தீர்ப்புரை
மாண்புமிகு நீதியரசர் திரு. பங்கஜ் மித்தல்
JUDGMENT
1. இது ஒரு விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான வழக்கு, ஆனால் எங்களால் தீர்ப்பளிக்க எதுவும் இல்லை.
2. பெருமளவிலான சொத்துக்களை வைத்திருந்த ஒரு பாதிரியார் சலுஸ்பரி ஃபைன்ஸ் டேவன்போர்ட், 24.01.1972 அன்று ஊட்டி, உதகமண்டலத்தில் இறந்தார். அவரது ஆயுள் காலத்தில், அவர், எதிர்மனுதாரர் எண்.3-தி/ள். கிங் மற்றும் பார்ட்ரிட்ஜ் நிறுவனத்தை உயிலின் நிறைவேற்றாளராக நியமித்து, 19.07.1969-ஆம் தேதியிட்ட உயிலை எழுதியிருந்தார். மேற்கூறிய நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான திரு. சக்கரவர்த்தி துரைசாமி, உயிலின் நிறைவேற்றாளராக தனது பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925, பிரிவு 222(1) மற்றும் 272- இன் கீழ், மேற்கூறிய உயிலின் மெய்ப்பிதழ் வேண்டி விண்ணப்பித்தார்.
3. உயில் மெய்ப்பிதழ் வழக்கு எண் எண் 15/1972-இல், ஊட்டி நீதிமன்றம் 29.07.1972 அன்று நிறைவேற்றாளருக்கு ஆதரவாக உயில் மெய்ப்பிதழ் ஆணை வழங்கியது. நிறைவேற்றாளர், 20.01.1973 அன்று நீதிமன்றத்தில் ஒரு விளக்க விவரப்பட்டி தாக்கல் செய்தார், அது 24.01.1973 அன்று பதிவு செய்யப்பட்டது. இறுதியாக, நிறைவேற்றாளர் 09.07.1973 அன்று இவ்விடயம் தொடர்பான இறுதிக் கணக்குகளைச் சமர்ப்பித்தார், அவை 17.07.1973 அன்று பதிவு செய்யப்பட்டன.
4. ரெவ். சலுஸ்பரி ஃபைன்ஸ் டேவன்போர்ட்டின் 19.07.1969-ஆம் தேதியிட்ட மேற்படி உயிலின் உயில் மெய்ப்பிதழ் தொடர்பான வழக்கு மேலே சொல்லப்பட்டவாறு முடிவுக்கு வந்தது.
5. பின்னர் 30.01.2016 அன்று, திருமதி மேரி பிரிஜிட் (தற்போது இறந்துவிட்டார்) மேற்கூறிய உயிலின் மெய்ப்பிதழ் நகலுக்கு விண்ணப்பித்தார். நகல் வழங்கப்படாததால், அவர், நீதிப்பேராணை மனு எண் 11266/2018-ஐ தாக்கல் செய்து, எதிர்மனுதாரரின் அதாவது ஊட்டி மாவட்ட நீதிபதியின் அலுவலகக் கோப்பிலுள்ள அ.ம. எண் 15/1972-இல் வழங்கப்பட்ட உயில் மெய்ப்பிதழ் நகலை வழங்குமாறு எதிர்மனுதாரர்களுக்கு செயலுறுத்துக் கட்டளையும், வழக்கின் சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளில் பொருத்தமானதும் சரியானதும் எனக் கருதக்கூடிய உத்தரவு அல்லது அதுபோன்ற பிற உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டினார்.
6. மேற்கூறிய நீதிப்பேராணை மனுவில், நிறைவேற்றாளர் தி/ள்.கிங் மற்றும் பார்ட்ரிட்ஜின் சார்பாக, சம்பந்தப்பட்ட காலத்தில் அந்த நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான பி. ரங்கநாத ரெட்டி மூலம் எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அவர் ஜனவரி, 1992-ஆம் ஆண்டில் நிறுவனத்தில் ஆலோசகர் வழக்குரைஞராக சேர்ந்ததாகவும், 1999-இல் பங்குதாரராகச் சேர்க்கப்பட்டதாகவும் கூறினார். நிறுவனத்தின் மற்ற பங்குதாரர்களும் 1999- க்குப் பிறகு சேர்ந்துள்ளனர். மனுதாரர் அ.ம. எண்.15/1972-இன் ஆவணங்கள் தொடர்பாக, நீதிப்பேராணை மனு மூலம் நிவாரணம் கோருவதால், அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும். இந்த உயில் மெய்ப்பிதழ், அந்த சமயத்தில், நிறுவனத்தின் மூத்த பங்குதாரராக இருந்த (மறைந்த) நிறைவேற்றாளரான திரு.சக்கரவர்த்தி துரைசாமியிடமிருந்து பெறப்பட்டது. மேற்படி பங்குதாரர் 1987-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று 1988-ஆம் ஆண்டு இறந்து விட்டார். மேலும் மனுதாரரும் அவரது மகள்களும் 2013-ஆம் ஆண்டு தன்னை முதன்முறையாக சந்தித்து, உயிலின் நகலையும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் திருப்பித் தருமாறு கோரியதாகவும் அவர் கூறினார். வழக்கு பழையதாக இருந்ததாலும், அதுகுறித்து அவருக்குத் தெரியாததாலும், அவர் பழைய ஆவணங்களை முழுமையாகத் தேடிப் பார்த்தும், மேற்கூறிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு காகிதத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்படி, அவர், மனுதாரரையும் அவரது மகள்களையும் அசல் உயிலையும், உயில் மெய்ப்பிதழின் நகலையும் மற்றும் பிற ஆவணங்களையும் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து பெற்றுவருமாறு அறிவுறுத்தினார். அப்போது நிறுவனத்தின் மூத்த பங்குதாரராக இருந்த மறைந்த சக்கரவர்த்தி துரைசாமி, உயில் மெய்ப்பிதழ் ஆணையைப் பெற்று, நீதிமன்றத்தில் கணக்குகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் உயிலின்படி தனது கடமையை உண்மையாக நிறைவேற்றியதாகவும் அவர் கூறினார்.
7. மாவட்ட நீதிமன்றத்தின் சார்பில், மேற்கூறிய நீதிப்பேராணை மனுவில் தனியாக எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, 19.07.1969-ஆம் தேதியிட்ட ரெவ். சலுஸ்பரி ஃபைன்ஸ் டேவன்போர்ட் அவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட உயிலின் மெய்ப்பிதழ் வழங்க வேண்டி அ.ம. எண் 15/1972 உதகமண்டலம் சார்பு நீதிமன்றத்தில் 07.07.1972 அன்று தி/ள். கிங் மற்றும் பார்ட்ரிட்ஜின் பங்குதாரர் திரு.சக்கரவர்த்தி துரைசாமியால் தாக்கல் செய்யப்பட்டது என்பது ஏற்கப்பட்டது. உயில் மெய்ப்பிதழ் மனு அனுமதிக்கப்பட்டு 29.07.1972 அன்று உயில் மெய்ப்பிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது. அசல் மனுவும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்களும், பதிவுகள் அழிப்புச் சட்டம், 1917-இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்க, நீலகிரி மாவட்ட அரசிதழில் உரிய அறிவிப்பிற்கு பின்னர் அழிக்கப்பட்டது. உயில் நிறைவேற்றாளருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டதா? அல்லது அது உயில் மெய்ப்பிதழ் ஆணையுடன் இணைக்கப்பட்டதா? என்பதை கிடைக்கக்கூடிய பதிவுகளும், பதிவேடுகளும் வெளிப்படுத்த முடியவில்லை. வழக்கு ஆவணங்களுடன் உயில் அழிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. அந்த நாட்களில் வழக்கத்திலிருந்த நடைமுறையின்படி, அசல் உயில், உயில் மெய்ப்பிதழ் உத்தரவுடன் இணைத்து கொடுக்கப்பட்டு வந்தது, எனவே அசல் உயில் அதை நிறைவேற்றும் நோக்கங்களுக்காக நிறைவேற்றாளருக்கு உயில் மெய்ப்பிதழ் உத்தரவுடன் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
8. திருமதி மேரி பிரிஜிட் இறப்புக்குப் பின்னர், அவரது மகன்களும், மகள்களுமான மனுதாரர்கள் எண்2-9, உயர்நீதிமன்றத்தால் 25.11.2021-ஆம் தேதியிட்ட உத்தரவின் மூலம் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
9. மேற்கண்ட வாதுரைகளின்பேரில், உயர் நீதிமன்றத்தின் நீதியர் ஆயம், அ.ம. எண்.15/1972 தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டு, கிடைக்காததால், மனுதாரர்களுக்கு உயிலின் நகலை வழங்குவதற்காக எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது என எதிர்ப்புக்குள்ளான உத்தரவின் மூலம் முடிவு செய்துள்ளது.
10. இந்தச் சிறப்பு அனுமதி மனு, மேற்கண்ட ஆவணங்களை வழங்க மறுத்ததன் மற்றும் நீதிப்பேராணை மனுவைத் தள்ளுபடி செய்ததன் விளைவாகும்.
11. திருமதி மேரி பிரிஜிட் வாரிசுகளில் ஒருவர் மட்டுமே அதாவது ஏ.வில்சன் பிரின்ஸ் மட்டுமே இந்தச் சிறப்பு அனுமதி மனுவைத் தாக்கல் செய்துள்ளார். நீதிப்பேராணை மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அவர் மட்டுமே வருத்தப்பட்டதாகத் தெரிகிறது, மற்றவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
12. மனுதாரரின் வாதம் யாதெனில், இதுபோன்ற விருப்பாவணம் தொடர்பான விஷயங்களில், அசல், குறிப்பாக உயில் எப்போதும் பாதுகாப்பாக வைக்கப்படும் மற்றும் அசல் உயிலை, பதிவுகளை அழிக்கும் சட்டம், 1917-ஐப் பயன்படுத்தி அழிக்க முடியாது என்பதாகும். அ.ம. எண் 15/1972 தொடர்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களை வழங்க எதிர்மனுதாரர்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பிரதிவாதிகளால் அசல் உயிலை அழித்திருக்க முடியாது மற்றும் எதிர்மனுதாரர்கள் அசல் உயில் அல்லது அதன் நகலை வழங்கக் கடமைப்பட்டுள்ளனர்.
13. இந்த விவகாரத்தில் கண்காணிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், உண்மை விரைவில் வெளியாகும் என்றும், அனைத்து சாத்தியக்கூறுகளிலும் சம்பந்தப்பட்ட உயில் வெளிவரும் என்றும் வாதிடப்பட்டது.
14. அ.ம. எண் 15/1972 தொடர்பான உண்மைகளை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி அலுவலகம், சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு 1998-இல், பணியில் இருந்த மாவட்ட நீதிமன்ற ஊழியர்களால் அ.ம. எண்.15/1972 என்ற வழக்கு ஆவணங்கள், பதிவுகள் அழித்தல் சட்டம், 1917-இன் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளது. இது, "III உயில்களைப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல்" என்ற தலைப்பின் கீழ் வகுக்கப்பட்டுள்ள உரிமையியல் நடைமுறை விதிகளை அறியாமல் செய்யப்பட்டிருக்கலாம் மற்றும் தற்போது "பெறப்பட்ட அசல் மனுக்களின் பதிவேடு" மற்றும் மேற்கூறிய வழக்கு தொடர்பான "விளக்க விவரப்பட்டி” ஆகியவை மட்டுமே நீதிமன்ற பதிவு அறையில் இருக்கின்றன. 19.07.1969-ஆம் தேதியிட்ட அசல் உயிலும் பதிவேடுகளை அழிக்கும்பொழுது ஒரு பகுதியாக அழிக்கப்பட்டுவிட்டதா என்பதைக் கண்டறிவது கடினம். உண்மையில், அந்த நேரத்தில், இருந்த நடைமுறையின்படி, அசல் உயில், உயில் மெய்ப்பிதழ் உத்தரவுடன் இணைக்கப்படுவது வழக்கம் என்றாலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அது உயில் நிறைவேற்றாளருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
15. அ.ம. எண் 15/1972 தொடர்பான ஆவணங்கள், முன்னாள் உதகமண்டல சார்பு நீதிமன்றத்தால் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படவில்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கற்றறிந்த தலைமை பதிவாளர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
16. மேலே விவரிக்கப்பட்ட சங்கதிகள் மற்றும் சூழ்நிலைகளில், தெளிவாவதாவது: i. பாதிரியார் சலுஸ்பரி ஃபைன்ஸ் டேவன்போர்ட், அவரது ஆயுட்காலத்தில், 19.07.1969- ஆம் தேதியிட்ட உயிலை எழுதியிருந்துள்ளார்; ii. அவர் தி/ள். கிங் மற்றும் பார்ட்ரிட்ஜை உயிலின் நிறைவேற்றாளராக நியமித்திருந்தார்; iii. அவர் 24.01.1972 அன்று உதகமண்டலத்தில் இறந்தார்; iv. அந்த நேரத்தில் நிறுவனத்தின் மூத்த பங்குதாரரான மறைந்த சக்கரவர்த்தி துரைசாமி உயிலின் மெய்ப்பிதழுக்காக விண்ணப்பித்து, அ.ம. எண் 15/1972 ஆனது பதிவு செய்யப்பட்டது; v. 29.07.1972 அன்று உயில் மெய்ப்பிதழ் வழங்கப்பட்டது; vi. திருமதி மேரி பிரிஜிட் 2016-இல் உயிலின் கீழ் பயனாளி என்று கூறி, உயில் மெய்ப்பிதழ் நகலுக்கு விண்ணப்பித்தார், பின்னர் 2018-இல் உயில் மற்றும் உயில் மெய்ப்பிதழ் நகலை வழங்குவதற்கான உத்தரவுக்காக ஒரு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்தார்; vii. எதிர்மனுதாரர்கள் இது ஒரு பழைய வழக்கு என்றும், அ.ம. எண்.15/1972- இன் ஆவணங்கள் 1998-ஆம் ஆண்டு வாக்கில் சட்டத்தின்படி அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்; viii. ஆவணம் ஒருபோதும் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை; ix. உண்மையில் அசல் உயில் ஆவணத்தின் ஒரு பகுதியாக இருந்து, அது அழிக்கப்பட்டுவிட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நடைமுறையின்படி நிறைவேற்றாளருக்கு உயில் மெய்ப்பிதழுடன் சேர்த்து அசல் உயில் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்; மற்றும் x. நிறைவேற்றாளரின் அலுவலகம், முழுமையான தேடலுக்குப் பிறகு, மேற்கூறிய வழக்கு தொடர்பாக எந்த ஆவணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
17. அத்தகைய நேர்வுகளில் அசல் உயில் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் அல்லது சிற்சில வேளைகளில் நிறைவேற்றாளரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்பது சரியானது என ஏற்றுக்கொண்டாலும், உயில் மெய்ப்பிதழின் பொருட்டு அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அசல் உயில் நீண்ட காலமாக கண்டுபிடிக்க முடியவில்லை எனில், அதற்கான வழிதான் என்ன எனும் சங்கதி எஞ்சியுள்ளது.
18. 19.07.1969-ஆம் தேதியிட்ட உயிலை, நிறைவேற்றாளரான தி/ள். கிங் மற்றும் பார்ட்ரிட்ஜின் பங்குதாரர்களில் ஒருவரின் சார்பாக 29.07.1972 அன்று முன்னாள் உதகமண்டல சார்பு நீதிமன்றத்தால், உயில் மெய்ப்பிதழ் வழங்கப்பட்டது என்னும் சங்கதியில் எந்தச் சர்ச்சையும் இல்லை. மேற்படி நிறுவனத்தின் மூத்த பங்குதாரர், நிறைவேற்றாளராக தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக, உயில் மெய்ப்பிதழுக்காக விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், இறந்தவரின் சொத்து/சொத்துகள் மற்றும் இறுதிக் கணக்குகள் தொடர்பான விளக்க விவரப்பட்டியலையும் இந்திய வாரிசுரிமைச் சட்டம், 1925-இன் பிரிவு 317-இன் கீழ் நீதிமன்றத்தில் 20.01.1973 மற்றும் 09.07.1973 அன்று முறையே தாக்கல் செய்தார்; இதன்மூலம் 1973-ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றாளர் இறந்தவரின் சொத்து/சொத்துகளை உயிலில் கூறியுள்ளபடி பயனாளிகளுக்கு பிரித்துக் கொடுத்து, அதன்பின் செய்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவில் நிறைவேற்றி உள்ளார். இறந்தவரின் சொத்துகள் உயிலுக்கு இணங்க, முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று எவரிடமிருந்தும் ஆட்சேபணை வந்ததில்லை.
19. திருமதி மேரி பிரிஜிட், தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவில், உயிலின் கீழ், திரு. ஜே.எல். கேப்ரியல் என்பவருக்கு ஆயுள் வரை அனுபவிக்கும் உரிமை வழங்கப்பட்டதாகவும், பயனாளி இளவராக இருந்ததால், உரிய வயது அடையும் வரை அவருக்குச் சொத்தை வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது என்றும் கூறினார். நீதிப்பேராணை மனுதாரரின் கூற்றுப்படி, ஆயுள் வரை அனுபவிக்கும் உரிமையாளரான கேப்ரியல் 22.02.1992 அன்று நீதிப்பேராணை மனுதாரரின் தந்தைக்கு ஆதரவாக ஒப்படைப்பை வெளிப்படையாக விட்டுவிட்டு மரணம் அடைந்துவிட்டார்.
20. உண்மையில், நீதிப்பேராணை மனுதாரர், இங்கிலாந்தில் உள்ள முக்கிய நிறுவனமான லாயிட்ஸ் வங்கியிடமிருந்துதான் உயில் மெய்ப்பிதழ் நடைமுறைகளைப் பற்றிய விவரங்களைப் பெற்றதாக நீதிப்பேராணை மனுவின் பத்தி 3-இல் கூறப்படுகின்றது. நீதிப்பேராணை மனுதாரர், லாயிட்ஸ் வங்கியைத் தொடர்புகொண்டதை பற்றி தனது மறைந்த தந்தை பராமரித்து வந்த நாட்குறிப்பிலிருந்து தான் அறிந்துகொண்டதாகக் கூறுகிறார். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய விவரங்கள் பின்வருமாறு: “எங்கள் மறைந்த தந்தையின் நாட்குறிப்பிலிருந்து, இங்கிலாந்தில் முக்கிய நிறுவனத்தைக் கொண்ட தி/ள். லாயிட்ஸ் வங்கியின் உள்ளூர் கிளையினைத் தொடர்புகொண்டதைக் குறித்து அறிந்துகொண்டோம். மேற்படி வங்கியை அணுகியபோது, 24.01.1972 அன்று 1-ஆவது எதிர்மனுதாரரின் முன் உயில் மெய்ப்பிதழ் நடவடிக்கைகளைத் தாக்கல் செய்வது பற்றிய விவரங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன, மேலும் 29.07.1972 அன்று அ.ம. எண்.15/1972-இல் உயில் மெய்ப்பிதழ் வழங்கி உத்தரவிடப்பட்டது”
21. உயிலின் உள்ளடக்கம் மற்றும் உயிலின் கீழ் செய்யப்பட்ட உயில் கொடைகளைக் குறித்து நீதிப்பேராணை மனுதாரர் ஏதும் அறிந்திருக்கவில்லை என்பதை நீதிப்பேராணை மனுவில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. எனவே, நீதிப்பேராணை மனுதாரர், இல்லாத புதையலை இருக்கிறது என்று நம்பி, புதையல் வேட்டையில் இறங்கியுள்ளார், அது கிடைத்துவிட்டால் அவருடையதாகவே இருக்கும் என்பதான ஒரு வழக்காக இது தோன்றுகிறது. அத்தகைய நபருக்கு நீதிமன்றம் உதவ முடியாது.
22. உயில் மெய்ப்பிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அசல் உயிலை அழித்திருக்கக் கூடாது என்பது உண்மை. சாதாரண சூழ்நிலையில், உயில் மெய்ப்பிதழ்அசல் உயில் ஆவணத்துடன் இணைக்கப்பட்டு, அந்த உயில் நிறைவேற்றாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று இவ்வளவு காலம் கடந்த பிறகு, (i) அது உண்மையில் அழிக்கப்பட்டதா; அல்லது (ii) அது நிறைவேற்றாளரிடம் ஒப்படைக்கப்பட்டதா; அல்லது (iii) நிறைவேற்றாளர், அதைப் பெற்றுக்கொண்டு, தொலைத்துவிட்டாரா என்று கண்டுபிடிக்க முடியாது. நிறைவேற்றாளர் அசல் உயிலை உயில்வழி உரிமையரிடம் ஒப்படைத்திருப்பதற்கான வாய்ப்பையும் விலக்கிவிட முடியாது.
23. உயிலின் நகலைப் பார்க்காத நீதிப்பேராணை மனுதாரர், தன்னை ஒரு பயனாளி (அல்லது பயனாளியின் வாரிசு) என்று எப்படிக் கூறுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மனுதாரர் குறைந்தபட்சம் உயிலின் நகலைப் பார்த்திருந்தால் மற்றும் அதன் உள்ளடக்கங்களை அறிந்திருந்தால், மனுதாரருக்கு சட்டத்தின் கட்டமைப்பிற்குள் சாத்தியமான சில நிவாரணங்களை வழங்குவது பற்றி நாங்கள் ஒருவேளை சிந்தித்து இருப்போம். நீதிப்பேராணை மனுதாரரின் ஊகத்தின் அடிப்படையில், உயிலுக்கு என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்த இந்த நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, நீதிப்பேராணை மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்க இயலாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது சரிதான் என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, சிறப்பு அனுமதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. செலவுத்தொகை இல்லை. மாண்புமிகு நீதியரசர் திரு. இராமசுப்ரமணியன் மாண்புமிகு நீதியரசர் திரு. பங்கஜ் மித்தல் புது தில்லி; மே 15, 2023