Tamil Nadu Government v. R. Thamaraiselvam & Ors.

Supreme Court of India · 04 May 2023
Shah; B. V. Nagarathna
Criminal Appeal No 1580-1608 of 2022; Criminal Appeal No 275 of 2022
administrative appeal_dismissed Significant

AI Summary

The Supreme Court upheld the High Court's quashing of Tamil Nadu government orders establishing special anti-land grabbing units and courts due to absence of statutory definitions and guidelines, emphasizing the need for clear legislation to regulate such offences.

Full Text
Translation output
வெளியிடக்கூடியது
இந்திய உச்ச நீதிமன்றம்
உரிமையியல் மேல்முறையீட்டு அதிகார வரம்பு
உரிமையியல் மேல்முறையீடு எண் 1580-1608/2022
தமிழ்நாடு அரசு & பலர் ... மேல்முறையீட்டாளர்கள்
-எதிர்-
ஆர். தாமரைசெல்வம் முதலானோர் ... எதிர்மேல்முறையீட்டாளர்கள்
உடன்
குற்றவியல் மேல்முறையீடு எண் 275/2022
தீர்ப்புரை
JUDGMENT

1. சென்னை உயர்நீதிமன்றம், நீதிப்பேராணை மனு எண் 18872/2011 மற்றும் பிற தொடர்புடைய நீதிப்பேராணை மனுக்களில் வழங்கிய 10.02.2015-ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான பொதுவான தீர்ப்பு மற்றும் உத்தரவில் மேற்கண்ட நீதிப்பேராணை மனுக்களை அனுமதித்தும், 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 423, உள் (காவல் XI) துறை (இனி இதற்குப்பிறகு ‘28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அ.ஆ. எண் 423’ எனக் குறிப்பிடப்படும்) அத்துடன் 11.08.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 451, உள் (நீதிமன்றம் III) துறை (இனி இதற்குப்பிறகு ‘1.08.2011-ஆம் தேதியிடப்பட்ட அ.ஆ. எண் 451’ எனக் குறிப்பிடப்படும்) ஆகிய அரசாணைகளை இரத்து செய்தும் வழங்கிய உத்தரவின் மீது மனக்குறைவுற்றும், அதிருப்தி அடைந்தும் தமிழ்நாடு அரசு தற்போதைய மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளது. 1.[1] மெட்ராஸ் உயர்நீதிமன்றம் குற்றவியல் முதலேற்பு மனு எண் 23641/2019-இல் 04.11.2020- ஆம் தேதியிடப்பட்ட எதிர்ப்புக்குள்ளான உத்தரவில், ஆ.ப.வ. எண் 2/2012 என்ற வழக்கை ஈரோடு, நில அபகரிப்பு, சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலிருந்து ஈரோடு குற்றவியல் நடுவர் எண் 2 அவர்களின் கோப்புக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து இந்த குற்றவியல் மேல்முறையீடு எண் 275/2022 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. தமிழ்நாடு அரசு நில அபகரிப்பு வழக்குகளைக் கையாள்வதற்காக, 36 நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவுகளை, மாநில காவல்துறை தலைமையகம், 7 ஆணையரகங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகளை உருவாக்க 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-இன்படி அனுமதி அளித்துள்ளது. மேற்படி அரசாணையைத் தொடர்ந்து, 11.08.2011-ஆம் தேதியிடப்பட்ட மற்றொரு அரசாணை எண் 451 வெளியிடப்பட்டு, நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. மேற்கூறிய அரசாணைகள்தான் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுக்களின் கருப்பொருளாகும். 2.[1] சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த எதிர்ப்புக்குள்ளான பொதுவான தீர்ப்பு மற்றும் உத்தரவின் மூலம், குறிப்பிட்ட நபர்கள்தான் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார்கள் என்று அவர்களுக்கு எதிராக குறிப்பிட்ட வழக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், தேர்வு செய்வதற்கும் எந்த அளவுகோலையோ அல்லது வழிகாட்டுதலையோ வகுக்கவில்லை என்று கூறி, 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-ஐ இரத்து செய்துள்ளது. "நில அபகரிப்பு" என்ற வார்த்தை/சொற்றொடரின் வரையறை இல்லாதநிலையில், நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள காவல்துறையினருக்கு அவர்களுக்கு தோன்றும் நபர்களுக்கு எதிராக மு.த.அ.-ஐ தாக்கல் செய்து விசாரணை நடவடிக்கையைத் தொடங்க விருப்புரிமை அளிக்கப்படுகிறது; இதன் காரணமாக அதிகாரத்தை முறைகேடாக மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது. 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-ஐ உயர் நீதிமன்றம் இரத்து செய்து, நீக்கறவு செய்தபோது, மாநில அரசுக்கு, நீதிப்பேராணை மனுக்களின் முடிவுகளைப் பொருட்படுத்தாது, எந்தப் பொருத்தமான சட்டத்தையும் ஆ.பி. நில அபகரிப்பு (தடுப்பு) சட்டம், 1982 போலவோ அல்லது அதைவிட சிறந்த சட்டங்களையோ கொண்டுவர சுதந்திரம் உள்ளது என்றும் கருத்துரைத்துள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்றமும் 11.08.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 451-ஐ இரத்து செய்து, நீக்கறவு செய்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட எதிர்ப்புக்குள்ளான பொதுவான தீர்ப்பு மற்றும் உத்தரவு தற்போதைய உரிமையியல் மேல்முறையீடுகளின் வழக்குப் பொருளாகும்.

3. தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் திரு. ஆர். சண்முகசுந்தரம் ஆஜரானார். 3.[1] தமிழக அரசின் சார்பில் ஆஜரான கற்றறிந்த அரசு தலைமை வழக்குரைஞர், "நில அபகரிப்பு" குற்றத்திற்கு உரிய வரையறை இல்லாதநிலையில், நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு அவ்வகையான வழக்குகளை விசாரிக்கும் தகுதி இல்லை என முடிவு செய்து, உயர் நீதிமன்றம் அரசு ஆணைகளை இரத்து செய்ததில் தவறிழைத்துள்ளது என்று முனைப்புடன் பணிந்துரைத்துள்ளார். 3.[2] மேலும் காவல்துறை அதிகாரிகளால் முறைகேடாகவும் தவறாகவும் அதிகாரம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியமுள்ளது என்ற அடிப்படையில் 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-ஐ உயர் நீதிமன்றம் இரத்து செய்ததில் தவறிழைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடாகவும், தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதற்காக ஒரு சட்டம் தன்னிச்சையாக அல்லது இந்திய அரசமைப்பின் 14-ஆவது வகுமுறைக்கூறை மீறுவதாக உள்ளது என முடிவு செய்ய அடிப்படையாக இருக்க முடியாது. 3.[3] அடுத்து, தமிழ்நாடு மாநிலத்தில் குண்டர்கள் தங்கள் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக அதிக அளவில் புகார்கள் வந்து கொண்டிருப்பதால் குறிப்பிட்ட பிரச்சினையைக் கையாள சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் சரியாக சீர்தூக்கி பார்க்கத் தவறிவிட்டது. 3.[4] “நில அபகரிப்பு” என்ற சொற்றொடர், இந்திய தண்டனைச் சட்டத்தின் 447, 420 மற்றும் 506 ஆகிய பிரிவுகளுடன் தொடர்புடையது என்பதால், அச்சொற்றொடருக்கு குறிப்பிட்ட வரையறை எதுவும் தேவையில்லை என்பதை உயர் நீதிமன்றம் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது.

4. தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை அரசு வழக்குரைஞரின் வாதத்தை விரிவாகக் கேட்டோம். உயர்நீதிமன்றம் வழங்கிய எதிர்ப்புக்குள்ளான பொதுவான தீர்ப்பு மற்றும் உத்தரவை நாங்கள் கவனமாகப் பார்வையிட்டுள்ளோம். 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அ.ஆ. எண் 423-ஐயும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம், அது பின்வருமாறு: “ உள் (காவல்-XI) துறை அ.ஆ. (நிலை) எண்.423 நாள்: 28.07.2011 காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை - 4, அவர்களின் கடித எண்: 176388/ஆர்.ஏ. I (2)/2011, நாள்: 13.07.2011 படிக்கப்பட்டது. ஆணை:- 10.07.2011 தேதியிட்ட செய்திக் குறிப்பில், மாநிலத்தில் நில அபகரிப்பு வழக்குகளைக் கையாள்வதற்காக தமிழகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.

2. மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பின் அடிப்படையில், மாநிலத்தில் நில அபகரிப்பு வழக்குகளைக் கையாள்வதற்காக ரூ.27,71,11,658/-க்கான நிதி தேவையுடன் 410 காவலர்களைக் கொண்ட 39 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகளை அமைப்பதற்குத் தேவையான முன்மொழிவுகளை காவல்துறை தலைமை இயக்குநர் அரசுக்கு அனுப்பியுள்ளார்.

3. காவல்துறை தலைமை இயக்குநரின் முன்மொழிவைக் கவனமாக ஆய்வு செய்த அரசு, தமிழகத்தில் 36 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகளை, மாநில காவல்துறை தலைமையகம், 7 ஆணையரகங்கள் மற்றும் கரூர், திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைத் தவிர 28 மாவட்டங்களில் தற்காலிக அடிப்படையில் ஓராண்டுக்கு தலா ஒரு தனிப்பிரிவு, சில மாற்றங்களுடன் அமைப்பதற்கு நிர்வாக ஒப்பளிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. மேற்கூறிய மூன்று மாவட்டங்களில் மட்டும் நில அபகரிப்பு புகார்களில் மாவட்ட குற்றப்பிரிவு விசாரணை நடத்தும். தமிழ்நாட்டில் உள்ள 36 நில அபகரிப்பு தடுப்புச் சிறப்புப் பிரிவுகளின் பணியாளர் முறை இந்த ஆணையின் இணைப்பு-I-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு 36 நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்புப் பிரிவுகளை உருவாக்க ரூ. 20,02,08,842/- (இருபது கோடியே இரண்டு இலட்சத்து எட்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்திரண்டு மட்டும்) நிதி ஒப்பளித்துள்ளது. இந்த ஆணையின் இணைப்பு-II முதல் IV வரையிலானவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தொடரும் மற்றும் தொடராச் செலவினங்கள் முறையே ரூ.12,51,01,380/- மற்றும் ரூ.7,51,07,462/- ஆகும்.

4. மேலே உள்ள பத்தி 3-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினங்கள், தொடர்புடைய பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்: “2055-00-காவல்துறை – அந்தந்த துணைத் தலைப்புகளின் கீழ்”

5. இந்தச் செலவினம் என்பது "புதிய பணி" என்ற இனத்தில் வரும். உரிய நேரத்தில் சட்டப்பேரவையின் ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், செலவினமானது முதற்கண் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறுவதன் மூலம் மேற்கொள்ளப்படும், இது தொடர்பான ஆணைகள் நிதித் (வரவு-செலவு-பொது-I) துறையால் தனியாக வெளியிடப்படும். நடப்பு ஆண்டில் எதிர்பாராச் செலவின நிதியிலிருந்து தேவையான முன்பணம் பெறுவதற்காக அரசின் நிதித் (வரவு-செலவு-பொது-I) துறைக்கு உரிய படிவத்தில் இந்த ஆணையின் நகலுடன் சேர்த்து விண்ணப்பிக்குமாறு சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். திட்டத்தின் மொத்த செலவு, நிதியாண்டில் அவற்றைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் செலவு போன்றவற்றைக் குறிக்கும் வரைவு விளக்கக் குறிப்பை, உரிய நேரத்தில் சட்டமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக, துணை மதிப்பீடுகளில் செலவினங்களைச் சேர்ப்பதற்காகவும் அரசின் நிதித் (வரவு-செலவு-பொது-I) துறைக்கு அனுப்பிவைக்குமாறும் பணிக்கப்படுகிறார்.

6. இந்த ஆணை நிதித்துறையின் ஒப்புதலுடன் அதன் U.O. எண். 39471/CMPC/2011-1, நாள் 28.07.2011-இல் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படுகிறது மற்றும் கூடுதல் நிதியொதுக்கல் பேரேட்டு எண் 337 (முந்நூற்று முப்பத்தேழு) வெளியிடப்படுகிறது. (ஆளுநரின் ஆணைப்படி) ரமேஷ்ராம் மிஸ்ரா அரசு முதன்மைச் செயலாளர்”

5. மேற்கூறிய அரசாணை மூலம், நில அபகரிப்பு வழக்குகளைக் கையாள்வதற்காக தமிழ்நாடு அரசு 36 நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவுகளை அமைத்துள்ளது/ உருவாக்கியுள்ளது. எவ்வாறாயினும், அந்த அரசாணையில் எந்த வகை வழக்குகள் நில அபகரிப்பு வழக்குகள் என்று வரையறுக்கப்படவில்லை மற்றும்/அல்லது குறிப்பிடப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் விருப்பப்படி, நிலம் தொடர்பான எந்த வழக்கையும் நில அபகரிப்பு வழக்காகக் கருதலாம் மற்றும்/அல்லது பரிசீலிக்கலாம், மேலும் அந்த வழக்கு, கு.ந.ச.-இன் கீழ் காவல்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்படாமல், நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவால் விசாரிக்கப்படவேண்டும். ஆ.பி. நில அபகரிப்பு (தடை) சட்டம், 1982 அல்லது கர்நாடகா நில அபகரிப்புத் தடைச் சட்டம், 2011 அல்லது பிற மாநிலங்களிலுள்ள இதுபோன்ற நில அபகரிப்புத் தடைச் சட்டங்கள் போன்ற எந்த நில அபகரிப்புத் தடுப்புச் சட்டமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பிற நில அபகரிப்புத் தடைச் சட்டங்களில், “நில அபகரிப்பு” குறிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். "நில அபகரிப்பாளர்" என்ற சொல்லுங்கூட வரையறுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேச நில அபகரிப்பு (தடை) சட்டம், 1982-இல், “நில அபகரிப்பாளர்” மற்றும் “நில அபகரிப்பு” பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன: "நில அபகரிப்பாளர்" என்பது நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நபர் அல்லது குழுவினர் ஆகும் மற்றும் சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காகவோ அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களைக் கட்டுவதற்காகவோ நிதி உதவி அளிக்கும் நபர்கள் அல்லது அந்த நிலங்களில் உடைமையில் உள்ளவர்களிடம் வாடகை, நட்ட ஈடு மற்றும் இதர கட்டணங்களை குற்றமுறு மிரட்டல் மூலம் வசூலிப்பவர்கள் அல்லது வசூலிக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் மேற்கண்ட செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள்; மேலும் உரிமை உள்ள வாரிசுகளையும் உள்ளடக்குகிறது. "நில அபகரிப்பு" என்பது ஒரு நபர் அல்லது குழுவினரால், எந்தச் சட்ட உரிமையும் இல்லாமல், அந்த நிலங்களைச் சட்டவிரோதமாக உடைமையில் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அந்த நிலங்கள் தொடர்பாக சட்டவிரோதமான வாடகையுரிமை அல்லது குத்தகையுரிமையை ஏற்படுத்துதல் அல்லது உருவாக்குதல் மற்றும் உரிம உடன்படிக்கைகள் அல்லது வேறேதேனும் சட்டவிரோதமான உடன்படிக்கைகள் செய்துகொள்ளுதல் அல்லது விற்பனைக்காகவோ அல்லது வாடகைக்காகவோ அதில் அனுமதி இல்லாத கட்டிடங்களைக் கட்டுதல் அல்லது அந்த நிலங்களை எந்த ஒரு நபருக்கும் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு மற்றும் உரிமம் வழங்குவதன்பேரில் சட்டவிரோதமாக கட்டுமானங்களைக் கட்டுவதற்கோ அல்லது பயன்பாடு மற்றும் கையுடைமைக்கோ கொடுத்தல் போன்ற நோக்கத்துடன் நிலத்தை (அரசாங்கம், உள்ளாட்சி, வக்ஃப் உட்பட ஒரு மத அல்லது தொண்டு நிறுவனம் அல்லது அறக்கட்டளை அல்லது வேறு ஏதேனும் தனியார் நபர்களுக்கு சொந்தமானது) அபகரிக்க செய்யும் அனைத்து செயல்களும் எனப் பொருள்படுகிறது, மேலும் "அபகரிக்க மற்றும்" என்ற சொல் அதற்கேற்ப பொருள் கொள்ளப்படவேண்டும்.

6. தமிழக அரசைப் பொறுத்தவரையில், நில அபகரிப்பு வழக்குகளைக் கையாள ஆந்திர பிரதேச நில அபகரிப்பு (தடை) சட்டம், 1982 மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை பிரத்தியேகமாக கையாள்வதற்கு 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-இன்படி அமைக்கப்பட்டுள்ள நில அபகரிப்புத் தடுப்புச் சிறப்பு பிரிவுகள் போன்ற குறிப்பிட்ட இயற்றுச்சட்டம் மற்றும்/அல்லது சட்டம் எதுவும் இல்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட நிலைப்பாடாகும். எந்தெந்த வழக்குகளை நில அபகரிப்பு வழக்குகள் என்று கூறலாம் என்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும்/அல்லது வரையறை இல்லாதபட்சத்தில், இது, எந்தவொரு நிலம் தொடர்பான வழக்கையும் நில அபகரிப்பு வழக்காகக் கருத காவல்துறைக்கு கட்டுப்பாடற்ற, வழிகாட்டுதலற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குகிறது, இது நில அபகரிப்பு சிறப்பு பிரிவால் விசாரிக்கப்படும். குறித்தவகை நிவாரணச் சட்டம் மற்றும்/அல்லது சொத்து பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இரண்டு தனியார் நபர்களுக்கு இடையேயான தகராறு கூட, குற்றவியல் மேல்முறையீட்டு எண் 275/2022 இல் உள்ளதைப் போல நில அபகரிப்பு வழக்காகக் கருதப்படலாம், குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் குறித்தவகை நிறைவேற்றத்திற்காக ஓர் உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்துவந்தது, அது வழக்குத் தொடராத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, அதன் பிறகு பிரதிவாதி இ.த.ச.-இன் கீழ் குற்றங்களுக்காக ஒரு புகார்/மு.த.அ. தாக்கல் செய்தார். ஆகவே "நில அபகரிப்பு வழக்குகள்" குறித்த குறிப்பிட்ட வழிகாட்டுதல் மற்றும்/அல்லது வரையறை இல்லாதபட்சத்தில், அத்தகைய அதிகாரங்கள் முறைகேடாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தப்படலாம், மேலும் அத்தகைய அதிகாரங்கள் தன்னிச்சையாகவும் பயன்படுத்தப்படலாம் என்று உயர்நீதிமன்றத்தால் சரியாகக் கருத்துரைக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் மிகச்சரியாக 28.07.2011-ஆம் தேதியிடப்பட்ட அரசாணை எண் 423-ஐ நீக்கறவு செய்து, மாநில அரசு, ஆ.பி. நில அபகரிப்பு (தடுப்பு) சட்டம், 1982 போலவோ அல்லது அதைவிட சிறந்த சட்டங்களையோ, எந்த வழக்குகள் நில அபகரிப்பு வழக்குகள் எனக் கூறப்படலாம் என்று வழிகாட்டுதல்களை வரையறுத்து அல்லது வகைசெய்து அளித்த பிறகு எந்தப் பொருத்தமான சட்டத்தையும் கொண்டு வர சுதந்திரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட எதிர்ப்புக்குள்ளான தீர்ப்பு(கள்) மற்றும் உத்தரவு(கள்) இந்த நீதிமன்றத்தின் எந்தத் தலையீட்டினையும் கோரவில்லை.

7. இந்தச் சூழ்நிலைகளில், அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்குரியவை, எனவே அதன்படி தள்ளுபடி செய்யப்படுகின்றன. இருப்பினும், நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால், மாநில அரசு நில அபகரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் விழிப்புணர்வுடனும் மற்றும்/அல்லது ஆர்வமுடனும் உள்ளது எனில், மாநில அரசு "நில அபகரிப்பாளர்" மற்றும் "நில அபகரிப்பு" போன்றவற்றுக்கு தெளிவான வரையறையுடன் உரிய சட்டம் இயற்றலாம் அல்லது "நில அபகரிப்பாளர்", "நில அபகரிப்பு" மற்றும் "நில அபகரிப்பு வழக்குகள்" போன்றவற்றுக்கு தெளிவான வரையறையுடன் இன்னும் சிறப்பான சட்டங்களை இயற்றலாம் மற்றும் அது போன்ற சட்டம் மற்றும்/அல்லது சிறந்த சட்டங்களுக்கு இந்த உத்தரவு தடையாக அமையாது.

8. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, குற்றவியல் மேல்முறையீட்டு எண் 275/2022, தனிப்பட்ட நபர்களுடன் தொடர்புடையதாகும், இத்தரப்பினர்களுக்கு இடையேயான இக்குற்றவியல் வழக்கு, சிறப்பு நீதிமன்றத்திலிருந்து (நில அபகரிப்பு) வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டது, மேலும் அது தள்ளுபடிக்குரியது, அதற்கேற்ப அது தள்ளுபடி செய்யப்படுகிறது. புது தில்லி; மே 04, 2023. மாண்புமிகு நீதியரசர் திரு. ஷா மாண்புமிகு நீதியரசர் பி.வி. நாகரத்னா